Publish Date: Tue, 15 May 2018 (12:06 IST)
Updated Date: Tue, 15 May 2018 (12:08 IST)
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி துணை நடிகையை அழைத்து சென்று 3 பேர் கற்பழித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை போரூர் சக்தி நகர், 5வது குறுக்கு தெருவில் வசித்து வரும் ஒரு பெண், சினிமாவில் துணை நடிகையாக சில படங்களில் நடித்துள்ளார். மேலும், கதாநாயகியாக நடிக்கவும் வாய்ப்பு தேடி வந்தார்.
இந்நிலையில், குமார் என்ற நபர் இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, தான் ஒரு தயாரிப்பாளரிடம் பணிபுரிவதாகவும், புதிதாக எடுக்கும் ஒரு படத்தில் உங்களை கதாநாயகியாக நடிக்க முடிவு செய்திருக்கிறோம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும், தற்போது தயாரிப்பாளர் சென்னை வந்துள்ளதால் அவரை நீங்கள் சந்திக்க வேண்டும். எனவே போரூர் சிக்னல் அருகே வந்தால் உங்களை காரில் அழைத்து செல்கிறோம் எனக் கூறியுள்ளார்.
எனவே, அன்று இரவு அந்த பெண்ணும் அந்த இடத்திற்கு வர, காரில் அவரை குமார் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். காருக்கு பின்னால் 2 பேர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்துள்ளனர். குன்றத்தூருக்கு அருகில் உள்ள தரப்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு அவரை அழைத்து சென்றுள்ளனர்.
வீட்டிற்குள் சென்றதும் கத்தி முனையில் அவரை மிரட்டி 3 பேரும் கற்பழித்துள்ளனர். அப்போது வீடியோவும் எடுத்துள்ளனர். மேலும், அவரிடமிருந்த செல்போன், பணம், நகை ஆகியவற்றை பறித்துக்கொண்டு, இதை வெளியே கூறினால், இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம், மேலும், உன்னை கொலை செய்வோம் என மிரட்டி விட்டு சென்றுள்ளனர்.
ஆனாலும் அப்பெண் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எனவே, அவரது செல்போனுக்கு வந்த எண், அடையாளம், கார் பதிவெண் ஆகியவற்றை வைத்து அந்த 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.