Publish Date: Tue, 30 Jan 2018 (12:16 IST)
Updated Date: Tue, 30 Jan 2018 (12:21 IST)
தமிழக பாஜகவை சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோரிடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இது தற்போது அப்பட்டமாக எச்.ராஜாவின் டுவிட்டர் பதிவில் வெளிப்பட்டுள்ளது.
பொன்.ராதாகிருஷ்ணன் திராவிட கட்சிகள், கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என கூறி வந்தார். ஆனால் திடீரென தான் அப்படி கூறவில்லை, நானும் ஒரு பச்சை திராவிடன் தான். பாஜக கூட ஒரு திராவிட கட்சிதான் என அதிரடியாக சில தினங்களுக்கு முன்னர் கூறினார்.
பொ.ராதாகிருஷ்ணனின் இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணமோ தெரியவில்லை. இதற்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கடுமையான எதிர்வினையாற்றியுள்ளார். இருவருக்கும் இடையே உள்ள மோதல் போக்கை வெளிக்காட்டும் விதமாக அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
எச்.ராஜா தனது பதிவில், மாண்புமிகு அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் முன்வைத்துள்ள கோஷம். கழகங்கள் இல்லா தமிழகம். ஆனால் நடத்துகின்ற விவாதம் திராவிடம் பற்றி. வீண் விவாதம் ஆரிய திராவிட இனவாத கட்டுக் கதைக்கு சரியான இடம் குப்பை தொட்டிதான் என்று Dr. அம்பேத்கர் அவர்கள் கூறியுள்ளார்.
மேலும், நிலப்பரப்பை பொருத்தவரை ராஜா உட்பட இப்பகுதியில் வசிக்கும் அனைவரும் திராவிடரே. ஆனால் ஆரிய திராவிட இனவாத கட்டுக் கதைக்கு சரியான இடம் குப்பை தொட்டிதான் என்று அம்பேத்கர் அவர்கள் கூறியுள்ளார்கள். இதையாரும் மறுத்திட முடியாது. நிலப்பரப்பை இனமாக சித்திகரிப்பது ஏற்புடையதல்ல என இரண்டு டுவீட் சரவெடியாக பதிவிட்டுள்ளார்.