Publish Date: Tue, 27 Jun 2023 (08:06 IST)
Updated Date: Tue, 27 Jun 2023 (08:08 IST)
சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபைக்குள் பக்தர்களை அனுமதிக்க மறுத்து தீட்சிதர்கள் பூட்டிக் கொண்டதால் பரபரப்பு எழுந்துள்ளது.
கடந்த சில காலமாகவே சிதம்பரம் நடராஜர் கோவில் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடராஜர் கோவிலில் உள்ள கனகசபை மீது பெண் பக்தர் ஒருவர் ஏறியதற்காக தீட்சிதர்கள் அவரை தள்ளிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அதை தொடர்ந்து கனகசபை மீது பக்தர்கள் ஏறி தரிசனம் செய்யலாம் என இந்து சமய அறநிலைய துறை அறிவித்தது. அறநிலையத்துறையின் இந்த அறிவிப்புக்கு சிதம்பரம் தீட்சிதர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அத்தோடு மட்டுமல்லாமல் கனகசபை மீது பக்தர்கள் ஏறக் கூடாது என தீட்சிதர்கள் சார்பில் கோவிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
ஆனால் அதை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றினர். இதனால் அதிகாரிகளுக்கும், தீட்சிதர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளை கண்டித்து தீட்சிதர்கள் கனகசபை கதவை பூட்டிக் கொண்டதால் பரபரப்பு எழுந்துள்ளது.
3 மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக முடிவு ஏற்படாத நிலையில் கோட்டாட்சியர் முன்னிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.