Publish Date: Tue, 15 Oct 2024 (15:15 IST)
Updated Date: Tue, 15 Oct 2024 (15:16 IST)
சென்னையில் இன்று காலை 8.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ அளவுக்கு மட்டுமே மழை பொழிந்துள்ள நிலையில், அதையே சென்னை மாநகரத்தால் தாங்க முடியவில்லை. சென்னை மாநகரின் பல பகுதிகளில் ஓரடி உயர்த்திற்கும் கூடுதலாக மழை நீர் தேங்கி நிற்கிறது.
பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. சென்னையில் தமிழக அரசாலும், சென்னை மாநகராட்சியாலும் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் உள்ளிட்ட வெள்ளத்தடுப்புப் பணிகள் போதிய அளவுக்கு பயனளிக்கவில்லை என்பதையே 6 செ.மீ மழையின் விளைவுகள் காட்டுகின்றன. அப்படியானால், 20 செ.மீ மழை பெய்தால் சென்னை என்னவாகும்? என்ற அச்சம் மேலும் அதிகரித்திருக்கிறது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
இந்த பதிவுக்கு தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
"சென்னையில் இன்று காலை 8.00 முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ அளவுக்கு மட்டுமே மழை பொழிந்துள்ள நிலையில், அதையே சென்னை மாநகரத்தால் தாங்க முடியவில்லை" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் நேற்று (14.10.2024) காலை 8.30 மணி முதல் இன்று (15.10.2024) காலை 8.30 மணி வரை அதிகபட்சமாக எண்ணூரில் 10 செ.மீ மழையும், மணலி, திருவிக நகர், பொன்னேரி, ராயபுரம், கொளத்தூரில் 9 செ.மீ மழையும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோடம்பாக்கம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை பகுதிகளில் 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“சென்னையில் 6 செ.மீ. மழை மட்டுமே பெய்துள்ளதாகப் பரவும் தவறான தகவல்! என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.