Publish Date: Sun, 24 May 2020 (09:36 IST)
Updated Date: Sun, 24 May 2020 (09:38 IST)
சென்னையில் சிப்கார் தொழிற்பேட்டைக்குள் உள்ள நோக்கியா நிறுவனத்தில் 40 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதை தொடர்ந்து அத்தொழிற்சாலை காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. நான்கு கட்ட ஊரடங்காக மே இறுதி வரை ஊரடங்கு தொடரும் நிலையில் பல தொழிற்சாலைகள் மற்றும் கடைகள் செயல்பட தளர்வுகள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மூன்றாவது கட்ட ஊரடங்கு முடிந்த நிலையில் சென்னையில் உள்ள ஒரகடம் சிப்காட் தொழிற்பேட்டையில் சில நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் இயங்க தொடங்கின.’
இந்நிலையில் சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் நோக்கியா தொழிற்சாலையில் பணிபுரிந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த ஆலையில் பணிபுரியும் 57 ஊழியர்களுக்கு சோதனை நடத்தப்பட்டத்தில் 40 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் மறு அறிவிப்பு வரும் வரை நோக்கியா தொழிற்சாலை காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.