Publish Date: Mon, 01 Jul 2019 (06:58 IST)
Updated Date: Mon, 01 Jul 2019 (06:59 IST)
சென்னையில் ஒருசில ஓட்டுனர்கள் தங்களுக்கு இன்னும் சம்பளம் வரவில்லை என்பதால் பேருந்துகளை இயக்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
போக்குவரத்து ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் அன்றைய மாத கடைசி தினத்தில் சம்பளம் போடப்படும். ஆனால் நேற்று ஜூன் 30ஆம் தேதி ஒருசிலருக்கு சம்பளம் கிடைக்கவில்லை. மேலும் மொத்த சம்பளத்தில் 62% தான் தற்போது தரப்படும் என்று அதிகாரிகள் கூறியதாகவும், ஊழியர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து சென்னை மாநகரில் சுமார் 3500 பேருந்துகள் இன்று இயங்கவில்லை என்றும் குறிப்பாக அம்பத்தூர் ஆவடி பட்டாபிராம் திருமங்கலம் ஆகிய பணிமனைகளில் இருந்து சுமார் 850 பேருந்துகள் இயங்கவில்லை என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.
வாரத்தின் முதல் நாள் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் செல்பவர்களுக்கு இந்த திடீர் வேலைநிறுத்தம் சிக்கலை ஏற்படுத்தும் என தெரிகிறது. வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம் போடக்கூட முடியாத அளவிற்கு அதிகாரிகளின் நிர்வாகம் இருப்பதாகவும், இதற்கு உடனடியாக தீர்வு ஏற்படுத்தி சம்பளத்தை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன