Publish Date: Sun, 06 Aug 2023 (12:38 IST)
Updated Date: Sun, 06 Aug 2023 (12:40 IST)
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திடீர் என பேருந்துகளை பயணிகள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி மதுரை உள்பட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பல மணி நேரமாக பயணிகள் காத்திருந்தும் பேருந்துகள் இல்லை என்பதால் பயணிகள் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்தனர். அப்போது பேருந்துகள் சில கிளம்பி கொண்டிருந்தபோது அந்த பேருந்துகளை சிறைபிடித்த பயணிகள் மற்ற பகுதிகளுக்கும் உடனடியாக பேருந்துகளை இயக்க போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
பயணிகள் போராட்டம் குறித்து தகவல் கிடைத்ததும் போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக சம்பவம் இடத்திற்கு வந்து பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்தே பயணிகள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் சில நிமிடங்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.