Publish Date: Tue, 06 Oct 2020 (13:33 IST)
Updated Date: Tue, 06 Oct 2020 (13:34 IST)
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் தனிமைப்படுத்தப்படுவர்கள் மீது அரசு எடுக்கும் நடவடிக்கை குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதேசமயம் அரசு அதிகாரிகள் கொரோனாவால் தனிமைப்படுத்தப்படுபவர்கள் மீது தேவையற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீடுகளை அதிகாரிகள் தகர சீட்டுகளை கொண்டு அடைத்த சம்பவம் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் “கொரோனா தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளை தகர சீட்டால் அடைப்பது எந்த விதிமுறைகளின் அடிப்படையில் செய்யப்படுகிறது?” என கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் இதுகுறித்து 19ம் தேதி பதிலளிக்க தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.