Publish Date: Thu, 02 Jan 2020 (18:57 IST)
Updated Date: Thu, 02 Jan 2020 (18:58 IST)
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. மாலை 6 மணி நிலவரப்படி மாவட்ட கவுன்சிலர் பதவியில் அதிமுக 121 இடங்களிலும் திமுக 155 இடங்கள் முன்னணியில் உள்ளது. அதேபோல் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அதிமுக 669 இடங்களிலும் திமுக 835 இடங்களில் முன்னிலையில் உள்ளது
இந்த நிலையில் ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையிலும் முடிவுகளை அறிவிக்காமல் இருப்பதாக திமுக குற்றம் சாட்டியது. இதுகுறித்து தேர்தல் ஆணைய அலுவலகத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் நேரடியாக சென்று புகார் அளித்தார்
மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்த வழக்கு ஒன்றும் திமுகவால் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிக்கப்பட்ட இடங்களில் முடிவுகளை அறிவிக்க கோரி திமுக வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த முறையீட்டை சென்னை ஐகோர்ட் ஏற்றுக்கொண்டது. அவசர வழக்காக நீதிபதி சத்யநாராயணன் அவர் விசாரிக்கவும் தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார்
இதனை அடுத்து இன்னும் ஒரு சிலமணி நேரங்களில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்றும் அப்போது முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது
வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும் நிலையில் திமுக நீதிமன்றத்துக்கு சென்றதும் தலைமை நீதிபதி அதிரடியாக முடிவு எடுத்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் நாளை வரை வாக்கு எண்ணிக்கை தொடரும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கையில் எந்த இடத்திலும் முறைகேடு நடைபெறவில்லை என்றும் அவர் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து உள்ளார்