Publish Date: Thu, 17 Jun 2021 (11:55 IST)
Updated Date: Thu, 17 Jun 2021 (11:58 IST)
யூட்யூப் ஆபாச பேச்சு வழக்கில் தேடப்பட்டு வரும் மதன் முன் ஜாமீன் கேட்ட நிலையில் நீதிமன்றம் முன் ஜாமீன் தர மறுத்துள்ளது.
யூட்யூப் சேனலில் பெண்களை அருவக்கத்தக்க வகையிலும், ஆபாசமாகவும் பேசியது தொடர்பாக பிரபல யூட்யூபர் மதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து புளியந்தோப்பு காவல்நிலையத்தில் ஆஜராக மதனுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் மதன் தலைமறைவானார். இந்நிலையில் பப்ஜி மதனின் தந்தை, மனைவி கிருத்திகா ஆகியோரிடம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில் மதனின் யூட்யூப் வீடியோவில் மதனுடன் பேசி வந்தது அவர் மனைவி கிருத்திகா என்றும், இந்த வீடியோக்களால் மதன் மாதம் தோறும் ரூ.7 லட்சம் வரை சம்பாதித்ததாகவும் தெரிய வந்துள்ளது. மதனின் வருமானம், வங்கி கணக்குகளை போலீஸார் ஆராய தொடங்கியுள்ளது.
இந்நிலையில் மதனுக்கு முன் ஜாமீன் கேட்டு மதனின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனு மீதான விசாரணையில் பேசிய நீதிபதி தண்டபானி “மதன் பேசும் வீடியோக்களை காது கொடுத்து கேட்க முடியவில்லை. முதலில் அவரின் வீடியோ, ஆடியோக்களை கேட்டு விட்டு வந்து வாதாடுங்கள். மதனின் வீடியோ குழந்தைகளை சீரழிப்பதுடன், பெண்களையும் இழிவுப்படுத்தும் விதமாக உள்ளன” என தெரிவித்துள்ளார். மேலும் நீதிமன்றம் மதனுக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.