Publish Date: Mon, 20 Jul 2020 (12:54 IST)
Updated Date: Mon, 20 Jul 2020 (13:01 IST)
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. ஒருசில பள்ளிகளில் தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலைய்ல் இந்த ஆன்லைன் வகுப்புகளை நெறிப்படுத்த வேண்டும் என்று எழுந்த கோரிக்கையை அடுத்து மத்திய அரசு சமீபத்தில் ஆன்லைன் வகுப்புகள் குறித்த விதிமுறைகளை வெளியிட்டது
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 45 நிமிடங்களுக்கு என நாள் ஒன்றுக்கு இரண்டு வகுப்புகள் நடத்தலாம் என்றும் 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 45 நிமிடங்களுக்கு மிகாமல் நான்கு வகுப்புகள் நடத்தலாம் என்றும், எல்கேஜி யுகேஜி குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது
இந்த நிலையில் தற்போது இது குறித்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தபோது ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மத்திய அரசு சார்பில் ஏற்கனவே ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கான வழிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதல் குறித்து தமிழக அரசின் முடிவு என்ன? என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து விரைவில் தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது