Publish Date: Thu, 13 Mar 2025 (11:36 IST)
Updated Date: Thu, 13 Mar 2025 (11:37 IST)
சென்னையில் வரும் 19ஆம் தேதி ஆட்டோக்கள் ஓடாது என, "தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சமயநலத்தின்" செயல் தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு ஆட்டோ மீட்டர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று 2022ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், அது குறித்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், தற்போது மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்றும், பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் என்றும், ஆட்டோ செயலியை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆட்டோ ஓட்டுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சேர்ந்த 11 தொழிற்சங்கங்கள் இணைந்து, மார்ச் 19ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, சென்னை நகரத்தில் இயங்கும் சுமார் ஒரு லட்சம் ஆட்டோக்கள் இயங்காது என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.