இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்துள்ள இலங்கை தமிழர்கள் இனி சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ், உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்தவர்களுக்கு தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்தத் தண்டனை விதிகளிலிருந்து இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. இது, நீண்டகாலமாக இந்தியாவில் அகதிகளாக வசித்து வரும் இலங்கை தமிழர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவு, மனிதாபிமான அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது. இது, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழும் இலங்கை தமிழர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.