Publish Date: Thu, 19 Jul 2018 (20:30 IST)
Updated Date: Thu, 19 Jul 2018 (20:34 IST)
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், திருமலைக்கவுண்டன் பாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சத்துணவு சமைக்கும் ஊழியராக தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பாப்பம்மாள் நியமிக்கப்பட்டார்.
ஆனால், இந்த நியமனத்தை ஏற்க மறுத்த மேல்சாதியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த பெண் சமைத்தால், பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று கூறி வேறு ஒருவரை நியமித்து சத்துணவு சமைத்துள்ளனர்.
இந்த எதிர்ப்பை தகர்க்க பள்ளி தலைமையாசியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. எனவே, வேறு வழியின்றி பாப்பம்மாள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு, பாப்பம்மாளின் இடமாற்றத்தை ரத்து செய்து, மீண்டும் அதே பள்ளியில் பணியமர்த்தவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் சாதி வெறிகள் மீது வழக்குப்பதிவு செய்யவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.