Publish Date: Tue, 11 May 2021 (11:12 IST)
Updated Date: Tue, 11 May 2021 (11:13 IST)
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில் 65 இடங்களில் வெற்றிபெற்றுள்ள அதிமுக சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் அதிமுக சார்பில் எதிர்கட்சி தலைவராக யாரை நியமிப்பது என்பதில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் எழுந்தது.
இதனால் நேற்று முழு ஊரடங்கிற்கு மத்தியில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவராக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், முழு பொதுமுடக்க விதிகளை மீறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், அரசு உத்தரவை மீறுதல், உயிருக்கு ஆபத்தான தொற்றுநோய் பரப்பக்கூடிய வகையிலான செயலில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.