Publish Date: Mon, 08 Jan 2024 (14:31 IST)
Updated Date: Mon, 08 Jan 2024 (14:36 IST)
இன்றைய முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், திட்டமிட்டபடி நாளை வேலை நிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கள் அறிவித்திருந்த நிலையில், நாளை (ஜனவரி 9) பேருந்துகள் இயங்கும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், பழைய ஓய்வூதிய திட்டம், 15வது ஊதிய ஒப்பந்ததை இறுதி செய்வது உள்ளிட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக இருமுறை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, இன்று அரசுடன் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தின. இதில், 6 கோரிக்கைகளில் 2 மட்டும் ஏற்கப்பட்டதால் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
எனவே நாளை 100 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படாது என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் நாளை பயணம் மேற்கொள்ளும் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நாளை (ஜனவரி 9) பேருந்துகள் இயங்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
2 கோரிக்கைகளை ஏற்றதால் தான் பொங்கலுக்கு பின் மற்றவை குறித்து முடிவெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை பேருந்துகள் இயங்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், 2 கோரிக்கைகள் ஏற்கனவே ஏற்பதாக போக்குவரத்து சங்கங்கள் தெரிவித்துள்ளது. தொமுக உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் நாளை பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.