Publish Date: Wed, 10 Jan 2018 (22:59 IST)
Updated Date: Wed, 10 Jan 2018 (22:45 IST)
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் குறித்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தின் அறிவுரையை ஏற்று வேலைநிறுத்தத்தை முடித்து கொள்வதாகவும், அதே நேரத்தில் பேச்சுவார்த்தைக்கு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் கூறியதாக இன்று மாலை செய்திகள் வெளிவந்தன.
இதனால் இன்று இரவு முதல் வழக்கம்போல் பேருந்துகள் ஓடும் என்று பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடரும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளதாக தற்போது வெளிவந்திருக்கும் செய்தியால் பொதுமக்கள் மீண்டும் கவலை அடைந்துள்ளனர். நாளை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன
இந்த வழக்கின் விசாரணையின் இடையே பொதுமக்களின் நலன் கருதி பிரச்னைக்கு தீர்வு காண நினைக்கிறீர்களா? இல்லையா? என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேட்டபோது, மக்கள் நலனில் அரசுக்கே அக்கறையில்லாதபோது எங்களுக்கு ஏன் என தொழிற்சங்கங்கள் பதிலளித்துள்ளன. இருப்பினும் நாளை தொழிற்சங்கங்கள் நல்ல முடிவுக்கு வருவார்கள் என நம்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.