புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்த நபர் ஒருவரை போலீசார் விசாரணைக்கு பின் விடுவித்தனர்.
சிவகங்கை கிழக்கு மாவட்ட தவெக செயலாளர் மருத்துவர் பிரபுவின் தனி பாதுகாவலரான டேவிட் என்பவரே துப்பாக்கியுடன் இருந்தவர் ஆவார். மருத்துவர் பிரபுவுக்கு அரசு அனுமதியுடன் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், தொண்டர்கள் வரும் வழியில் துப்பாக்கியுடன் அவர் தனியாக வந்ததால், புதுச்சேரி ஒதியஞ்சாலை போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். விசாரணையில், அவர் மத்திய சி.ஆர்.பி.எஃப். படையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் என்பதும், துப்பாக்கிக்கான சரியான உரிமம் வைத்திருந்தார் என்பதும் தெரிய வந்தது.
உரிமம் இருந்த காரணத்தால் டேவிட் விடுவிக்கப்பட்டாலும், விசாரணை முடிவடையும் வரை அவரது துப்பாக்கி போலீஸ் வசம் ஒப்படைக்கப்படும் என்று புதுச்சேரி போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கூட்டத்தில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.