Publish Date: Wed, 22 Jul 2020 (12:54 IST)
Updated Date: Wed, 22 Jul 2020 (12:57 IST)
மருத்துவ படிப்பில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் சிபிஎம் கட்சியினர் எங்களுக்கு பாடம் நடத்த தேவையில்லை என பாமக தலைவர் ஜிகே மணி தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க தமிழகத்தில் உள்ள பல கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்நிலையில் பாமக கட்சி சார்பில் தொடுக்கப்பட்டுள்ள மனுவில் 27% இடஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த சிபிஎம் கட்சி மாநில செயலாளர் ராதாகிருஷ்ணன் ”அனைத்து கட்சிகளும் 50% இடஒதுக்கீடு கோரி வரும் நிலையில் பாமக 27% கேட்டு மனு அளித்திருப்பதால் பிற வகுப்பினர் பாதிக்கப்படுவார்கள். பாமகவின் இந்த செயல் வருத்தம் அளிக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலளித்துள்ள பாமக தலைவர் ஜிகே மணி “இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு உள்ளது. ஆனால் 2006ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தின்படி ஓபிசி வகுப்பினருக்கு 27% தான் ஒதுக்க வகை செய்யப்பட்டிருக்கிறது. இதனால் மருத்துவ படிப்பில் மத்திய அரசின் திருத்தப்படி 27% அளிக்க வாய்ப்பிருக்கலாம். ஆனால் 50% இடஒதுக்கீடு வழங்க வாய்ப்பில்லை. அதை கருத்தில் கொண்டே பாமக இவ்வாறாக மனு அளித்துள்ளது. ஆகவே இடஒதுக்கீடு குறித்து சிபிஎம் கட்சியினர் பாமகவும் பாடம் நடத்த தேவையில்லை” என்று கூறியுள்ளார்.