Publish Date: Wed, 01 Jan 2020 (17:10 IST)
Updated Date: Wed, 01 Jan 2020 (17:15 IST)
நெல்லை கண்ணனை கைது செய்ய கோரி தர்ணாவில் ஈடுபட்ட ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜகவினர் பலரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நெல்லையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசிய நெல்லை கண்ணன் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா குறித்து சர்ச்சையாக பேசினார். இதனை தொடர்ந்து நெல்லை கண்ணன் மீது, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா குறித்து அவதூறு பரப்பியதாக பாஜக சார்பில் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.
அதன் பின்பு நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து நெல்லை கண்ணன் உடல் நலக்குறைவு காரணமாக வண்ணாரப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நெல்லை கண்ணனை கைது செய்யவேண்டும் என மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன்பு பாஜகவின் தேசிய செயலாலர் ஹெச்.ராஜா, பாஜகவை சேர்ந்த இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜகவினர் பலரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட ஹெச்.ராஜா உட்பட அனைவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.