Publish Date: Wed, 26 Jul 2017 (06:54 IST)
Updated Date: Wed, 26 Jul 2017 (06:57 IST)
விண்வெளி துறையில் இந்தியா கடந்த சில ஆண்டுகளாக அபார வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் தமிழக மாணவர்கள் விண்வெளித்துறையில் தொடர்ந்து உலக அளவில் சாதனை புரிந்து வருகின்றனர்.
சமீபத்தில் உலகிலேயே மிகச்சிறிய செயற்கைக்கோளை வடிவமைத்து தமிழக மாணவர் ரிஃபாத் ஷாரூக் குழுவினர் சாதனை புரிந்த நிலையில் தற்போது இவரது குழுவினர் மீண்டும் ஒரு சாதனையை செய்யவுள்ளனர்.
ரிஃபாத் ஷாரூக் உறுப்பினராக உள்ள ஸ்பேஸ் கிட்ஸ் என்ற அமைப்பை சேர்ந்த இளம் விஞ்ஞானிகள் தற்போது கலாம் சாட்-2 என்ற பெயரில் புதிய பலூன் செயற்கைகோள் ஒன்றை தயாரித்துள்ளனர். இந்த பலூன் செயற்கைக்கோள் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் தலைவர் மதிகேசன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் பேசியபோது, 'எங்கள் அமைப்பின் அடுத்தகட்ட முயற்சியாக ‘என்எஸ்எல்வி கலாம் சாட்-2’ பலூன் செயற்கைகோள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.2.5 லட்சம். அரசு பள்ளி மாணவர்கள் உள்பட 7 பேர் சேர்ந்து இந்த செயற்கைக்கோளை தயாரித்துள்ளனர். இந்த பலூன் செயற்கைக்கோள் வரும் ஆகஸ்ட் 24ம் தேதி நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது' என்று கூறினார்,.