அனிதாவை விமர்சித்த கிருஷ்ணசாமியின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றிய பாலபாரதியின் அதிரடி!
அனிதாவை விமர்சித்த கிருஷ்ணசாமியின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றிய பாலபாரதியின் அதிரடி!
Publish Date: Mon, 04 Sep 2017 (13:32 IST)
Updated Date: Mon, 04 Sep 2017 (13:35 IST)
நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதாவின் தற்கொலை மரணம் தமிழகத்தையே அழ வைத்தது. ஆனால் அவரது மரணம் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசினார் டாக்டர் கிருஷ்ணசாமி.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத விரக்தியில் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வு அவரது தற்கொலைக்கு காரணமில்லை. வேறு காரணங்களுக்காக அனிதா தற்கொலை செய்திருக்கலாம். இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியிருந்தார்.
இவரது இந்த கருத்துக்கு பலர் கண்டனங்கள் தெரிவித்தனர். இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி டாக்டர் கிருஷ்ணசாமி குறித்த ஒரு உண்மை செய்தியை அம்பலப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பாலபாரதி 2015 சட்டமன்றத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசிக்கொண்டிருந்தபோது அமைச்சர் ஒருவர் எழுந்து உங்கள் மகளுக்கு போதிய மதிப்பெண்கள் இல்லாதபோதும், முதலமைச்சரிடம் வந்து மெடிக்கலில் சேர உதவி கேட்டீர்கள்.
அடுத்த நிமிடமே அம்மா அவர்கள் மெடிக்கல் ஷீட் கொடுத்தாரே மறந்துவிட்டீர்களா எனக்கேட்க அப்போது கிருஷ்ணசாமி நான் மறக்கவில்லை. அதற்காக இப்போதும் நன்றி கூறுகிறேன் எனக்கூறி முதலமைச்சரைப்பார்த்து வணக்கம்போட இந்த வணக்கத்தை வேறு எங்காவது போடுங்கள் என்பதுபோல் வெடுக்கென்று முதலமைச்சர் முகத்தை திருப்பிக்கொள்ள டாக்டர் கிருஷ்ணசாமியின் சுயநலம் அப்போது சட்டமன்றத்தின் மேஜைமீது பொத்தென்று விழுந்தது.
தலித் குழந்தைக்கு அத்தகைய உதவி பெற்றதில் தவறே இல்லை. ஆனால், இப்படி புறவாசல் வழியாக உதவியைப் பெற்றுக்கொண்டவர் தமது மகளுக்கு ஒரு நீதி அனிதாவுக்கு இன்னொரு நீதி என்று முழங்கி வருவதுதான் வேதனை என கூறியுள்ளார். கிருஷ்ணசாமி பற்றிய இந்த தகவல் தற்போது வைரலாக பரவி வருகிறது.