Publish Date: Sat, 29 Sep 2018 (11:13 IST)
Updated Date: Sat, 29 Sep 2018 (11:17 IST)
நள்ளிரவில் காதலனுடன் கோபித்துக்கொண்டு வெளியேறிய இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோட்டை சேர்ந்த வாசுதேவன், திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். அவருக்கும், அதே நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இந்நிலையில், அப்பெண்ணை அழைத்துக்கொண்டு வாசுதேவன் ஏற்காட்டுக்கு சென்றுள்ளார். அங்கு ஜாலியாக சுற்றி பார்த்த இருவரும், இரவு விடுதி எடுத்து தங்கியுள்ளனர். அப்போது, வாசுதேவன் மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது, அவருக்கும், அவரின் காதலிக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில், அப்பெண் கோபித்துக்கொண்டு நள்ளிரவு என்றும் பாராமல் விடுதியை விட்டு வெளியே வந்துள்ளார்.
அண்ணா பூங்கா அருகே அந்த பெண் நடந்து வந்து கொண்டிருந்த போது, அவரை ஆட்டோ ஓட்டுனர் விஜயகுமார் மற்றும் கார் ஓட்டுனர் குமார் ஆகிய இருவரும் அப்பெண்ணிடம் பேச்சு கொடுத்து நடந்ததை தெரிந்து கொண்டனர்.
அப்போது, அப்பெண்ணை தேடி வாசுதேன் பின்னால் வந்துள்ளார். ஆனால், அவரை தாக்கிய ஆட்டோ ஒட்டுனர்கள் அவரிடமிருந்த பணம், செல்போன், நகை அனைத்தையும் பறித்துக்கொண்டு, அப்பென்ணை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பினர்.
அதன்பின், செல்லும் வழியில் குமார் இறங்கிவிட, இரவு நேரத்தை காட்டி விஜயகுமார் அவருக்கு தெரிந்த விடுதியில் அறை எடுத்து அப்பெண்ணை தங்க வைத்துள்ளார். மேலும், அப்போது அவரை விஜயகுமார் பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார். அதன் பின், அதிகாலையில், சேலம் புதிய நிலையம் அருகே அப்பெண்ணை இறக்கிவிட்டு சென்றுவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து வாசுதேவன் ஏற்காடு காவல் நிலையத்திலும், அப்பெண் சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். இதையடுத்து, குமார் மற்றும் விஜயகுமாரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.