Publish Date: Mon, 15 Jul 2019 (10:30 IST)
Updated Date: Mon, 15 Jul 2019 (10:35 IST)
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசன நேரம் குறைக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் கவலையில் உள்ளனர்.
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில், அத்திவரதர் கடந்த ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அத்திவரதரை தரிசிக்க வெளியூரிலிருந்து வாகனங்களில் வரும் பக்தர்கள், 4 கி.மி. தூரத்திலேயே நிறுத்தப்பட்டு இறக்கிவிடப்படுகிறார்கள். மேலும் பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க வெகு நேரம் ஆவதால் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள்.
இந்நிலையில் அத்திவரதர் தரிசன நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா அறிவித்துள்ளார். இது குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட கலெக்டர், அத்திவரதரை பக்தர்கள் தரிசனம் செய்ய அதிகாலை 4 1/2 மணி முதல் இரவு 10 மணி வரை ஒதுக்கப்பட்ட நிலையில், இனி அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும் அத்திவரதரை தரிசிக்க வரும் பகதர்களுக்கு, காஞ்சிபுரம் பஸ் நிலையத்திலிருந்து கோவில் வளாகத்திற்கு 20 மினி பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில், இனி கூடுதலாக 10 மினி பஸ்கள் இயக்கப்பட உள்ளது எனவும் கூறியுள்ளார்.
அத்திவரதர் தரிசனத்திற்காக பல மணி நேரங்கள் காத்திருந்தாலும், வழிபட தயாராக இருக்கிறார்கள் பக்தர்கள். இந்நிலையில் தற்போது தரிசனம் 1 ½ மணி குறைக்கப்பட்டது பக்தர்களுக்கு பெரும் வேதனையையும் , கவலையையும் அளித்துள்ளது.