Publish Date: Thu, 25 Jul 2024 (21:08 IST)
Updated Date: Thu, 25 Jul 2024 (21:18 IST)
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மாத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவா தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு , ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், அருள், சிவசக்தி உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் திருவேங்கடம் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பிரபல தாதாவின் மனைவியும் வழக்கறிஞருமான மலர்க்கொடி, ஹரிஹரன், திமுகவின் அருள், பாஜகவின் செல்வராஜ், அஞ்சலை உள்ளிட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மணலி அருகே மாத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவா என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மேலும் கைதான சிவா வீட்டில் இருந்து ரூ.9 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்தில், கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் சிவா மூலம் கொலையாளிகளுக்கு பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் சிவா கைதுடன் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் சிவா எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பூவிருந்தவல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.