Publish Date: Mon, 07 Mar 2022 (13:34 IST)
Updated Date: Mon, 07 Mar 2022 (13:52 IST)
2 ஆண்டுகள் கழித்து இன்று ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் அப்பல்லோ மருத்துவர்கள் வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நல குறைவால் கடந்த 2016ம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக சர்ச்சை எழுந்த நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த ஆணையம் எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் இருந்த நிலையில் இன்று முதல் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளது.
இதில் முதற்கட்டமாக அப்பல்லோ மருத்துவர் பாபு மனோகர் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் “2016ல் முதல்வராக பதவியேற்கும் முன்பே ஜெயலலிதாவுக்கு தலை சுற்றல், மயக்கம், துணையின்றி நடக்க முடியாத சூழல் ஆகிய பிரச்சினைகள் இருந்தன. ஆனால் ஜெயலலிதா ஓய்வெடுத்துக் கொள்ள மறுத்தார். நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் தனக்கு பணி இருப்பதாக அவர் கூறினார். சிறுதாவூர் அல்லது ஊட்டி சென்று ஓய்வெடுக்க பரிந்துரைத்து சில மருந்துகளையும் பரிந்துரைத்தேன்” என அவர் தெரிவித்துள்ளார்.