வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அதிமுக எம்எல்ஏ வீட்டில் சோதனை நடந்து வருவது பண்ருட்டி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சத்யா பன்னீர்செல்வம் எம்எல்ஏவாக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் தற்போது சோதனை நடந்து வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் எம்எல்ஏ சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம் கடந்த 2011 முதல் 2016 ஆம் ஆண்டில் பண்ருட்டி நகராட்சி தலைவராக இருந்தார் என்றும், அப்போது அவர் 20 லட்சம் ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், பன்னீர்செல்வம் உட்பட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கின் அடிப்படையிலும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததின் வழக்கின் அடிப்படையிலும் தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
சத்யா பன்னீர்செல்வம் அவர்களுக்கு சொந்தமான பண்ருட்டி மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ள வீடுகளிலும், அலுவலகங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.