Publish Date: Tue, 17 Jul 2018 (10:43 IST)
Updated Date: Tue, 17 Jul 2018 (11:10 IST)
சென்னை-சேலம் எட்டு வழிச்சாலையை அதிமுக, பாஜக தவிர கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் எதிர்த்து வருகின்றன. அதேபோல் விவசாய நிலத்தை இழக்கும் பொதுமக்களும் இந்த திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தபோது எட்டு வழிச்சாலைக்கு தனது ஆதரவை தெரிவித்தார். இந்த சாலையால் தொழில்வளம் பெருகும், வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும் அவர் தனது கருத்தை கூறினார். ரஜினி என்ன சொன்னாலும் எதிர்த்து வரும் ஒருசிலர் இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாமக 30-ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி, ரஜினியின் இந்த கருத்துக்கு தனது கண்டனத்தை பதிவு செய்தார். ரஜினி என்ன சொன்னாலும் ஊடகங்கள் தலைப்பு செய்தியாக்கிவிடுவதாகவும், எட்டு வழிச்சாலை குறித்து ரஜினிக்கு என்ன தெரியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஆனால் அதே நேரத்தில் ரஜினியின் இந்த கருத்துக்கு பல ஊடகங்கள் டுவிட்டரில் கருத்துக்கணிப்பை எடுத்தபோது ரஜினியின் கருத்துக்கு ஆதரவாக சுமார் 50% வாக்குகள் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது