Publish Date: Sun, 20 Jan 2019 (20:14 IST)
Updated Date: Sun, 20 Jan 2019 (20:15 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்கவுள்ள அரசியல் கட்சிகளிடம் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை நடத்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் குழு ஒன்றை அமைத்துள்ளார்.
இந்த குழுவின் தலைவராக திமுக பொருளாளர் துரைமுருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரது தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் திமுக பிரமுகர்களான பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி, கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் எட்டு பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் கனிமொழி, டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், துரைசாமி, திருச்சி சிவா, ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன், ராமசாமி ஆகியோர் உள்ளனர். இந்த தகவலை திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.