Publish Date: Sat, 21 Jul 2018 (11:30 IST)
Updated Date: Sat, 21 Jul 2018 (11:36 IST)
தஞ்சாவூரில் போலீஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அமமுக பிரமுகர் மர்ம மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள பழவேரிக்காடு முன்னாள் ஊராட்சித் தலைவரான குமாரசெல்வம் தற்போது, தினகரனின் அமமுகவின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினராக இருந்து வந்தார்.
இந்நிலையில் ஒரு வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என மதுக்கூர் போலீஸார் குமாரசெல்வத்தை அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தை கேட்ட அவரது உறவினர்கள், குமாரசெல்வத்தை பார்க்க காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அவருக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போனதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது, அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர். அதிர்ந்துபோன அவரது உறவினர்கள் அவர் சாவில் மர்மம் இருப்பதாக கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.