Publish Date: Sat, 02 Nov 2019 (09:22 IST)
Updated Date: Sat, 02 Nov 2019 (09:23 IST)
போலீஸ் உடையில் வழிப்பறியில் ஈடுபட்ட அமமுக பிரமுகர் ஒருவரை போலீசார் மடக்கி கைது செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சேலம் மாவட்டத்தில் உள்ள கன்னங்குறிச்சி என்ற பகுதியில் வழக்கம்போல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்த போது, போலீசார் பயன்படுத்தும் உடைகள், தொப்பி மற்றும் லத்தி ஆகியவை இருந்ததால் அது குறித்து கார் ஓட்டி வந்தவரிடம் விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த அமமுக மாநகர இளைஞரணி செயலாளர் ஜெகதீஸ்வரன் என்பவர் தன்னை போலீஸ் எனக் கூறிக் கொண்டு வழிப்பறி செய்து வந்தது தெரிய வந்தது. போலீஸே வழிப்பறி செய்ததால் யாரும் புகார் கொடுக்காமல் இருந்துள்ளனர்.
இதனையடுத்து உடனடியாக ஜோதீஸ்வரன் இருக்கும் பகுதிக்கு சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து சொகுசு கார், 4 போலீஸ் தொப்பி, மற்றும் 2 லத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் போலீஸ் உடை அணிந்து அவர் யார் யாரிடம் எங்கெங்கு வழிப்பறி செய்தார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவரிடம் மெலும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது