Publish Date: Mon, 03 Jul 2017 (18:31 IST)
Updated Date: Mon, 03 Jul 2017 (18:34 IST)
தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் அம்மா திருமண மண்டபங்கள் அமைக்கப்படும் என தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் அறிவித்துள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சியிலிருந்த போது அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட், அம்மா குடிநீர் பாட்டில், அம்மா மருந்தகம் என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அமுல்படுத்தப்பட்டன. ஆனால் அவரின் மறைவிற்கு பின் தமிழக அரசு சார்பில் எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று சட்டசபையில் பேசிய அமைச்சர் மணிகண்டன், தமிழக அரசு சார்பில் சென்னையில் கொரட்டூர், வேளச்சேரி, பருத்திப்பட்டு மற்றும் அயம்பாக்கம் ஆகிய பகுதிகளிலும், மதுரையில் அண்ணாநகர் பகுதியிலும் அம்மா திருமண மண்டபங்கள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், தமிழக அரசு கேபிள் டிவிக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கப்பட்டிருப்பதால், அரசு கேபிள்துறை சார்பில் அனைவருக்கும் இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.