ஜல்லிக்கட்டிற்காக மாணவர்கள் அமைதியாக நடத்திய போராட்டத்தில் நடிகர் லாரண்ஸ் போன்றவர்களை அனுமதித்தது தவறு என்பத தற்போது உணர்ந்துள்ளோம் என போரட்டக்காரர்களில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜல்லிகட்டுக்கு அனுமதி வேண்டும் என மதுரை அலங்காநல்லூர், சென்னை, கோவை, திருச்சி, சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த ஒரு வார காலமாக போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை அதிகாலை முதல் சென்னை, மதுரை உட்பட போராட்டம் நடைபெறும் அனைத்து இடங்களில் இருந்தும், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். வெளியேற மறுத்துவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர். சென்னையின் திருவல்லிக்கேனி, ஐஸ் ஹவுஸ், ஆயிரம் விளக்கு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர்.
போரட்டத்தின் முக்கிய களமாக திகழ்ந்த சென்னை மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லத்திற்கு எதிராக கூடியிருந்த லட்சக்கணக்கான போராட்டக்காரர்களில், பெரும்பாலானோர் போலீசாரின் கோரிக்கையை ஏற்று நேற்று அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டனர்.
ஆனால், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் திருவல்லிக்கேனி, ஆயிரம் விளக்கு, பட்டினப்பாக்கம் பகுதி மக்கள் ஆகியோர் இன்னமும் மெரினா கடற்கரையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பான ஒரு விவாத நிகழ்ச்சியை ஒரு தனியார் தொலைக்காட்சி நேற்று இரவு நடத்தியது. அதில் பேசிய சிலர் கூறியதாவது:
முதலில் மாணவர்கள் ஒன்று கூடிதான் போராட்டத்தை நடத்தினோம். எங்கள் போராட்டத்தில் அரசியல்வாதிகளோ, நடிகர்களோ பங்கு பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். ஆனால், 3வது நாள் லாரன்ஸ் உள்ளே வந்தார். அவர் இதற்கு முன் சமூகத்தில் பல உதவிகளை செய்தவர் என்பதாலும், உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் எங்களுடன் கை கோர்க்க வந்ததால் அவரை மட்டும் அனுமதித்தோம். நாங்கள் அனைவரும் தரையில் அமர்ந்திருந்தாலும், அவருக்கு இருக்கை வசதி செய்து கொடுத்தோம்.
அதனாலேயே அவர் எங்களுக்கு தலைவர் போல் செயல்பட்டார். எங்கள் கருத்துகளை சொல்லவிடாமல், அவரே பெரும்பாலும் பேசிக் கொண்டிருந்தார். கடைசி நாளன்று தன்னிச்சையாக செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அது எங்கள் போராட்டத்தையே நீர்த்து போக செய்து விட்டது. பாழ்படுத்தி விட்டது.
தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தில் ஆளுநர் கையெழுத்து இட்டதும் போராட்டத்தை முடித்துக் கொள்வோம் என நாங்கள் முதலிலேயே கூறினோம். ஆனால், நிரந்தர சட்டம் வரும் வரை போராடுவோம் என எங்களை தடுத்ததே அவர்தான். ஆனால் கடைசியில் அவரே மாற்றி பேசிவிட்டார். சினிமாக்காரர்களை உள்ளே விடாமல் இருந்திருந்தால் எங்கள் போராட்டம் சரியான பாதையிலேயே முடிந்திருக்கும். இந்த தவறை அடுத்த முறை செய்யமாட்டோம்” என அவர்கள் கூறினார்கள்.
ஆனால், இது தொடர்பாக லாரன்ஸிடம் நேற்று நடத்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒரு பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த லாரன்ஸ், தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தின் நகலை போலீசார் என்னிடம் கொடுத்தார்கள். ஆனால், அதில் ஆளுநரின் கையெழுத்து இல்லை. அதனால் அதை ஏற்க நான் மறுத்துவிட்டேன். தற்போது இது நிரந்தர சட்டமாக்கப்படும் என முதல்வர் உறுதி அளித்துள்ளார். எவ்வளவு நாள் இப்படி மாணவர்கள் போராடிக் கொண்டிருக்க முடியும். அதனால்தான் போராட்டத்தை முடித்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தேன்” என கூறியது குறிப்பிடத்தக்கது.