Publish Date: Sat, 08 Sep 2018 (15:00 IST)
Updated Date: Sat, 08 Sep 2018 (15:03 IST)
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை மிரட்டி தன்னை கட்சியிலிருந்து நீக்கியதாக மு.க.அழகிரி பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
திமுகவில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அழகிரி சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் பேரணியும் நடத்தினார்.
இந்நிலையில், ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
திமுகவின் வளர்ச்சிக்காக நான் பாடுபட்டேன். சில குறைகளை கூறினேன். சில ஆதாரங்களை எடுத்துக்கொண்டு காட்டினேன். அதனால், கலைஞருக்கு என்னை நீக்க வேண்டும் என்கிற எண்ணமே கிடையாது. பொதுச்செயலாளருக்கும் கிடையாது.
நான் எங்கே கட்சியில் வளர்ந்து விடுவேனோ என நினைத்து சிலர் சதி செய்து, கலைஞரை மிரட்டி என்ன கட்சியிலிருந்து நீக்குமாறு செய்து விட்டனர். 2014ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது கலைஞரை சந்தித்து என்னை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ளுமாறு கேட்டேன். கொஞ்ச நாட்கள் அமைதியாக இரு... சேர்த்துக் கொள்கிறேன் என அவர் தெரிவித்திருந்தார்.
அதன் பின் அவரின் உடல்நிலை சரியில்லாமல் போனது. அவர் பேச முடியாத சூழ்நிலையில் எதற்கு தொல்லை கொடுக்க வேண்டும் என பொறுமையாக காத்திருந்தேன். ஆனால், கடைசி வரை அது நடக்கவில்லை. என் வளர்ச்சியை கண்டு பயந்து சிலர் அதை செய்து விட்டனர்” என அவர் கூறினார்.