அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் புதிய கட்சி ஒன்றை தொடங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிமுக கட்சியில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே முரண்பாடுகள் தொடர்ந்து வந்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு பிறகு தன்னை அதிமுக கட்சியினராகவே ஓபிஎஸ் அணியினர் கருதி வரும் நிலையில் உரிமை மீட்பு குழு என்ற குழுவாக திரண்டனர்.
ஆனாலும் ஓபிஎஸ்ஸின் இந்த அதிமுக உமீகு ஒரு கட்சியாக இல்லாததால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்தாலும் தனிச்சின்னம் இல்லாமல் ஓபிஎஸ் போட்டியிட்டார். தற்போது தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில், அதிமுகவில் தன்னை இணைத்துவிட பாஜக மேலிடம் எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்த்த ஓபிஎஸ்க்கு ஏமாற்றம் மிஞ்சியதாக கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணி அமைந்த களிப்பில் பாஜக ஓபிஎஸ்ஸை ஓரம் கட்டுவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது. அதனால் ஓபிஎஸ் தனது தலைமையில் புதிய கட்சியை தொடங்குவது குறித்து அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறாராம். புதிய கட்சி அமைத்த பின் பாஜக அழைத்தால் தேசிய முற்போக்கு கூட்டணியில் இணைவது என்றும், இல்லாத பட்சத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஓபிஎஸ்ஸின் விருப்பப்பட்டியலில் உள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.
Edit by Prasanth.K