Publish Date: Thu, 21 Jul 2022 (08:44 IST)
Updated Date: Thu, 21 Jul 2022 (08:46 IST)
ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் 10 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் திறக்கப்படுகிறது.
கடந்த 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நடைபெற்ற போது அதிமுக அலுவலகத்தை ஓபிஎஸ் கைப்பற்றியதாக புகார் அளிக்கப்பட்டது. இதனால் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து காவல்துறையினர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.
இதனை அடுத்து அதிமுக அலுவலகத்தில் வைத்த சீலை அகற்ற வேண்டும் என பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த சில நாட்களாக விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் வழங்க உத்தரவிடப்பட்டது. மேலும் ஒரு மாதத்திற்கு தொண்டர்களை அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் அனுமதிக்க கூடாது. அதிமுக அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் 10 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மயிலாபூர் கோட்டாட்சியர் சீலை அகற்றி சாவியை ஈபிஎஸ் தரப்பிடம் ஒப்படைப்பார். அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிச்சாமியின் மேனேஜர் பெற்றுக் கொள்வார் என தெரிய வந்துள்ளது.