Publish Date: Thu, 20 Jun 2024 (14:05 IST)
Updated Date: Thu, 20 Jun 2024 (14:06 IST)
கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராயம் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிப்பது முறையாக இருக்காது என்றும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அதிமுக சார்பில் வழக்கு தொடர்ந்து உள்ள நிலையில் இந்த வழக்கில் நாளை என்ன உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கள்ளச்சாராய விற்பனை என்பது உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை என்றும் அவர்களின் பங்கு குறித்தும் விசாரிக்க வேண்டும் என அதிமுக தனது மனுவில் தெரிவித்துள்ளது.
ஆனால் தமிழக அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் விஷச்சாராயம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்றும், மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், காவல்துறை கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், மதுவிலக்கு துறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்