Publish Date: Mon, 01 Mar 2021 (07:40 IST)
Updated Date: Mon, 01 Mar 2021 (07:43 IST)
அதிமுக-பாஜக தொகுதி உடன்பாடு: நள்ளிரவில் முடிவடைந்த பேச்சுவார்த்தை!
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை நேற்று நள்ளிரவு ஒரு மணி வரை நடந்ததாகவும் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் டெல்லி புறப்பட்டுச் சென்றதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
நேற்று இரவு 10 மணிக்கு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அதிமுக பாஜக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக பாஜக தலைவர் எல் முருகன் ,சிடி ரவி உள்பட ஒருசிலர் பாஜக தரப்பிலும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் உள்ளிட்டோர் அதிமுக தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினர்
கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த விபரங்களை இன்னும் ஒரு சில நாட்களில் விரிவாக தெரிவிப்போம் என்று இந்த பேச்சுவார்த்தை முடிந்ததும் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்கள் பேட்டி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது