Publish Date: Fri, 29 Nov 2019 (22:47 IST)
Updated Date: Fri, 29 Nov 2019 (22:49 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது தமிழகத்தில் ஆளுமையுள்ள தலைவருக்கான இடம் இன்னும் வெற்றிடமாகவே இருப்பதாக தெரிவித்திருந்தார். ரஜினியின் இந்த கருத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்
இந்த நிலையில் ரஜினியின் வெற்றிடம் குறித்த கருத்து தவறு என்று அவருடன் நடித்த நடிகையும் ஆந்திர மாநில அரசியல்வாதியுமான நடிகை ரோஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நல்ல ஆளுமையுடன் இருக்கிறார். ஆனால் ரஜினிகாந்த் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை என ஏன் கூறினார் என்று எனக்கு தெரியவில்லை. என்னுடைய தொகுதி தமிழகத்தின் எல்லையில் இருப்பதால் தமிழகத்தில் இருந்து தொழில் தொடங்க வருபவர்கள் என்னை சந்தித்து அடிக்கடி வருவார்கள். அப்போது அவர்கள் அதிமுக குறித்தும் எடப்பாடி பழனிசாமி குறித்தும் பெருமையாக கூறி வருகிறார்கள்.
ஜெயலலிதா இருந்தபோது முகம் கூட தெரியாமல் இருந்த எடப்பாடி பழனிச்சாமி, தற்போது கட்சியையும் ஆட்சியையும் நல்ல முறையில் நிர்வாகம் செய்து வருகிறார்’ என்று நடிகையும் நகரி தொகுதி எம்.எல்.ஏவுமான ரோஜா கூறியுள்ளார். நடிகை ரோஜா ரஜினியுடன் வீரா மற்றும் உழைப்பாளி ஆகிய படத்தில் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது