Publish Date: Fri, 05 Jan 2018 (15:00 IST)
Updated Date: Fri, 05 Jan 2018 (15:06 IST)
சம்பள உயர்வு குறித்து தமிழக அரசுக்கும், போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் நேற்று மாலை முதல் பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை.
ஒரு சில பேருந்துகளை ஓட்டுனர்கள் பாதியில் நிறுத்திவிட்டு பேருந்துகளை இயக்க மறுத்ததால் நடுவழியில் பயணிகள் அவதிக்குள்ளாயினர். இதனால் தமிழ்நாடு முழுவதும் வேலை முடிந்து விட்டு வீடு செல்லவும், சொந்த ஊருக்கு செல்லவும் முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த வேலை நிறுத்தத்தால் கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. சென்னை மட்டுமில்லாமல், தமிழகத்தின் பல பகுதிகளிலும் பேருந்து வசதி இல்லாமல் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இன்று காலை நடிகர் கமல் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த நிலையில் நடிகர் விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது கருத்த்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து விஷால் டிவிட்டர் பதிவில், `அறிவிக்கப்படாத போக்குவரத்து ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் ஒட்டுமொத்த தமிழ்நாடே ஸ்தம்பித்துப் போயிருக்கிறது. விழாக்காலம் நெருங்கும் நேரத்தில் மக்களின் அவதி இன்னும் அதிகம் ஆகுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
மக்கள் நலன்மீது அக்கறைகொண்டு தமிழக அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று வேலை நிறுத்தத்தைக் கைவிடச் செய்ய வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.