Publish Date: Wed, 14 Oct 2020 (17:27 IST)
Updated Date: Wed, 14 Oct 2020 (17:32 IST)
ரஜினிக்கு சொந்தமான திருமண மண்டபம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ளது. அதை அவ்வப்போது ரஜினி தனது ரசிகர்களை சந்திக்கவும் பயன்படுத்திக் கொள்வார். இந்நிலையில் இப்போது அந்த மண்டபத்துக்கான கடந்த 6 மாதத்துக்கான சொத்து வரியைக் கட்ட சொல்லி மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆனால் கடந்த சில மாதங்களாக மண்டபம் திறக்கப்படாததால் சொத்து வரியை குறைக்கும்படி சென்னை மாநகராட்சிக்கு செப்டம்பர் 23ம் தேதி மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மனுவின் மீதான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மாநகராட்சிக்கு மனு அளித்து அவர்கள் நடவடிக்கை எடுப்பதற்குள் நீதிமன்றத்தில் மனு அளித்தது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இதுபோன்று செயல்பட்டு நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் என கூறிய நீதிபதிகள் இதற்கு அபராதம் விதிக்கப் போவதாகவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாக கூறியுள்ளனர். ஆனால் ரஜினி தரப்பில் மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருப்பதாகவும், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டாமென்றும், தாங்களே வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் ரஜினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்குச் சென்னை மாநகராட்சி விதித்த ரூ.6.50 லட்சம் சொத்து வரிக்கு எதிராக சூப்பர் ஸ்டார் ரஜினி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.