Publish Date: Sat, 02 Jun 2018 (11:54 IST)
Updated Date: Sat, 02 Jun 2018 (11:59 IST)
நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் துப்பாக்கி சூடு நடந்த தூத்துகுடி சென்று அதில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் தூத்துகுடியிலும் சென்னனயிலும் செய்தியாளர்களை சந்தித்து ஆவேசமாக சில கருத்துக்களை கூறினார். அதில் 'தூத்துகுடி கலவரத்திற்கு சமூக விரோதிகள் ஊடுருவியது தான் காரணம் என்றும் தமிழகத்தில் ஒரே போராட்டம் என்று நடந்து கொண்டிருந்தால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்றும் கூறினார்.
ரஜினியின் இந்த கருத்துக்கு அதிமுக, பாஜக தலைவர்களை தவிர மற்ற அனைத்து கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். சமூக விரோதிகள் தான் காரணம் என்றால் அந்த சமூக விரோதிகளை ரஜினிகாந்த் அடையாளம் காண்பிக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர். சரத்குமார் உள்ளிட்ட ஒருசில கோலிவுட் திரையுலகினர்களும் ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் நடிகர் கருணாகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினியின் இந்த கருத்து குறித்து கூறுகையில், 'ரஜினிகாந்த் அவர்களின் பேச்சின் முழுமை வேறு ஒரு வித்தியாசமான பார்வையைக் கொண்டுள்ளது. அவரிடம் நாம் ஒரு முதல்வரிடம் எதிர்பார்ப்பதைவிட அதிகமாக எதிர்பார்க்கின்றோம். இந்த அளவுக்கு அவரை விமர்சனம் செய்ய தேவையில்லை' என்று கூறியுள்ளார். கருணாகரனின் இந்த கருத்தை பல டுவிட்டர் பயனாளிகள் ஆமோதித்தும் ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.