Publish Date: Fri, 07 Sep 2018 (17:48 IST)
Updated Date: Fri, 07 Sep 2018 (17:53 IST)
சிறையில் இருக்கும் அபிராமிக்காக ஜாமீன் கேட்கவே மாட்டோம் என அவரின் தந்தை கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
சென்னை குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக அபிராமி என்ற பெண் தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து போலீஸார் அபிராமி, அவளது கள்ளக்காதலன் சுந்தரம் ஆகிய இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விவாகரம் பற்றி அபிராமியின் தந்தை ஆவேசமாக கருத்து தெரிவித்த போது “அவள் விஜயை காதலிப்பதாக கூறிய போது, அதற்கு சம்மதம் தெரிவித்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்தோம். அபிராமியை சந்தோஷமாக வாழவைக்க விஜய் கடுமையாக உழைத்தார். அவர்களின் வாழ்க்கை சந்தோஷமாகத்தான் போய்க் கொண்டிருந்தது.
இரு குழந்தைகள் பிறந்த பின்பும் அபிராமி ஆடம்பர செலவுகள் செய்து வந்ததால். வீட்டில் சமைக்காமல் ஹோட்டலில் உணவுகளை ஆர்டர் செய்து ஜாலியாக இருந்தாள். அவளின் பிறந்த நாளுக்கு விஜய் வாங்கிக்கொடுத்த வண்டியை அதிகம் ஊர் சுற்றவே பயன்படுத்தினாள்.
அவளுக்கு சுந்தரத்துடன் தொடர்பு ஏற்பட்ட போது பலமுறை அவளுக்கு அறிவுரை செய்தேன். ஆனால், கடைசி வரை அவள் கேட்கவே இல்லை. சம்பவம் நடக்கும் சில நாட்களுக்கு முன்பு கூட சுந்தரத்தின் வீட்டில் சென்று சில நாட்கள் தங்கிவிட்டாள். அங்கு சென்று அடித்து அவளை இழுத்து வந்து விஜயின் வீட்டில் விட்டேன்.
அப்போதே போலீசாரிடம் சென்றிருந்தால் இப்போது என் பேரக்குழந்தைகள் உயிரோடு இருந்திருப்பார்கள். அவர்கள் என்னை தாத்தா தாத்தா என அழைப்பது இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த சிறை தண்டனை அவளுக்கு தேவைதான். அவளுக்காக ஜாமீன் கேட்டு ஒருபோதும் விண்ணப்பிக்க மாட்டோம்” என அவர் அழுது புலம்பினார்.