கோவையில் கோவிலில் திருடிவிட்டு, அங்கேயே படுத்துத் தூங்கிய திருடன் பிடிப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை புதூர் பகுதியில் பால விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. அங்கு கோவில் குருக்கள் வழக்கம்போல காலையில் சென்று கதவை திறந்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அதேசமயம் உண்டியலுக்கு சற்று தொலைவில் ஒரு நபர் மதுபோதையில் முழுத் தூக்கத்தில் இருந்தார். திருடிய பணம் அவரிடம் இருந்துள்ளது.
அந்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்த நிலையில், அவர் காரைக்கால் நெடுங்காடு பகுதியை சேர்ந்த சின்னையன் என்பது தெரிய வந்துள்ளது. காரைக்காலில் பல திருட்டு வழக்குகள் ஏற்கனவே அவர் மீது உள்ளது.
புதூரில் வாடகை வீடு எடுத்து கட்டிட வேலைகளுக்கு சென்று வந்த சின்னையன் பால விநாயகர் கோவிலுக்குள் நுழைந்து உண்டியலை உடைத்து 8 ஆயிரம் ரூபாயை திருடியுள்ளார். மேலும் கோவிலில் இருந்த சில பொருட்களையும் திருடியுள்ளார். புறப்பட இருந்த நேரத்தில் மழை பெய்ததால், மழை நின்றதும் கிளம்பலாம் என ஒரு ஓரமாக படுத்தவர் நன்றாக அசந்து தூங்கியுள்ளார். அதனால் காலையில் அவராகவே மாட்டுக் கொண்டுள்ளார்.
Edit by Prasanth.K