Publish Date: Mon, 20 Jul 2020 (20:22 IST)
Updated Date: Mon, 20 Jul 2020 (20:30 IST)
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கோவையில் மூன்று கோவில்கள் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் கஜேந்திரன் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் எந்த கட்சியையும் சாராதவர் என்றும் எந்த அமைப்பையும் சாராதவன் என்பதும் தெரிய வந்தது
இந்த நிலையில் பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஹெச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவையில் மூன்று கோவில்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்கள் தான் குற்றவாளிகள் என ஹெச். ராஜா தனது டுவிட்டரில் கூறியுள்ளதாகவும், தற்போது கைது செய்யப்பட்டவர் எந்த அமைப்பையும் சாராதவர் என்று தெரிய வந்ததாகவும் இதனால் உண்மைக்குப் புறம்பான செய்தியை பரப்பிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்
பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்தவர்களின் இந்த போராட்டம் காரணமாக கோவை காவல்துறை ஆணையர் அலுவலகம் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது