நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்ட சுவாதியின் வழக்கில் தினமும் பல்வேறு தகவல்கள் வந்தவாறே உள்ளன. பலர் தானாக முன்வந்து தகவல்கள் அளிக்கின்றனர்.
சுவாதி படுகொலை செய்யப்பட்ட அதே நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு நபர் சந்தித்துப் பேசியதாகவும், அவரை கன்னத்தில் சரமாறியாக அடித்ததாகவும் தமிழ்ச்செல்வன் என்ற தனியார் நிறுவன ஊழியர் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தமிழ்ச்செல்வன் இது தொடர்பாக பேட்டியளித்தார் அதில், நான் தினமும் காலை 6.50 மணிக்கு செங்கல்பட்டு ரயிலில் ஏற 6.40-க்கு ரயில் நிலையத்தில் இருப்பேன். நான் 4-வது கம்பார்ட்மெண்ட்டில் ஏறுவேன். சுவாதி 5-வது கம்பார்ட்மெண்ட்டில் பெண்களுக்கான பெட்டியில் ஏறுவார்.
கடந்த 6, 7 தேதி போல சுவாதி கொலையுண்ட அதே இடத்தில் அமர்ந்திருந்தார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் தன் கையில் வைத்திருந்த வாட்டர் பட்டிலால் சுவாதியை சரமாறியாக அடித்தார். மேலும் சுவாதியின் கன்னத்திலும் அறைந்துள்ளார் அந்த நபர். அதில் நிலைதடுமாறி சுவாதியின் மொபைல் கீழே விழுந்தது.
கீழே விழுந்த மொபைல் போனை எடுத்துக்கொண்டு, ரயில் வந்தவுடன் ரயில் ஏறி சுவாதி போய்விட்டார். அவர் எந்தவித ரியாக்சனும் காண்பிக்கவில்லை. அங்கிருந்தவர்கள் என்ன இந்த பொண்ணு எந்தவித ரியாக்சனும் காண்பிக்கவில்லை. அப்படி அடித்துவிட்டு போகிறானே என்று பேசிக்கொண்டார்கள்.
ஆனால் காவல் துறை வெளியிட்ட புகைப்படம் தெளிவில்லாமல் இருப்பதால் அன்று சுவாதியை தாக்கியவன் தான் இந்த நபரா என்பது சரியாக தெரியவில்லை என்றார்.