Publish Date: Fri, 06 Oct 2017 (12:55 IST)
Updated Date: Fri, 06 Oct 2017 (12:57 IST)
சசிகலாவிற்கு 5 நாட்கள் மட்டுமே பரோல் அளித்து சிறைத்துறை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சசிகலாவின் கணவர் நடராஜன் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் சென்னை குளோபல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை காரணம் காட்டி சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் கேட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் மனு அளிக்கப்பட்டது.
அதில் போதிய ஆவணங்கள் இல்லை என கூறி அவரது மனு சிறை நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் சில ஆவணங்களை இணைத்து பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார் சசிகலா. இதனையடுத்து சசிகலா பரோல் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு தடையில்லா சான்றிதழ் கேட்டு கடிதம் அனுப்பியிருந்தது கர்நாடக சிறைத்துறை.
இந்த தடையில்லா சான்றிதழ் அளிப்பதில் கால தாமதம் ஏற்படுவதாக கூறப்பட்ட நிலையில் நேற்று சென்னை மாநகர காவல்துறை தடையில்லா சான்று அளித்துள்ளதாக கர்நாடக சிறைத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சசிகலா இன்று பரோலில் வெளிவருவது உறுதி என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது சசிகலாவிற்கு 5 நாட்கள் மட்டும் பரோல் அளித்து சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அவரை சென்னைக்கு அழைத்து வர ஏற்கனவே டிடிவி தினகரன் அக்ரஹார சிறையில் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது. காரில் சசிகலாவை அவர் அழைத்து வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.