Publish Date: Thu, 21 Jul 2016 (16:57 IST)
Updated Date: Thu, 21 Jul 2016 (17:00 IST)
ஏ.டி.எம். மையத்தில் கிடந்த ரசீதை வைத்து ஆன்லைன் மூலம் ரூ.48 ஆயிரத்துக்கு பொருட்கள் வாங்கி மோசடி செய்த வாலிபரை காவல் துரையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் செர்ந்த ராஜன் என்பவரது கணக்கில் இருந்து ரூ:48 ஆயிரத்து 781 எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. உடனே அதிர்ச்சி அடைந்த அவர் வங்கி அதிகாரிகளிடம் விசாரித்த போது, ஆன்லைனில் பொருள் வாங்கியதாக கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ராஜன் காவல் துறையில் புகார் செய்துள்ளார். விசாரணையில், ராஜன் கடந்த மாதம் ஓமலூர் பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்து விட்டு, ரசீதை அங்கே போட்டு சென்றுள்ளார். அதை அவருக்கு பின்னால் நின்ற ஒருவர் எடுப்பது சி.சி.டி.வி. கேமராவில் முகம் பதிவாகி இருந்தது தெரியவந்தது. மேலும் அவர் அங்கு பணத்தை எடுத்துள்ளார். இதையடுத்து காவல் துறையினர் அந்த நபர் பயன்படுத்திய ஏ.டி.எம். கார்ட்டை கண்டறிந்து அதன் மூலம் பெயர் முகவரியை கண்டுபிடித்தனர்.
அதில் அவர், தொளசம்பட்டி அருகே உள்ள கோவிலூர் பகுதியை சேர்ந்த பெரியசாமி(30) என்பது தெரியவந்தது. இந்நிலையில் நேற்று பெரியசாமியை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் உஷாராணி கைது செய்து விசாரணை நடத்தினார்.
இதில், ரசீதில் இருக்கும் நம்பர்களை தனது கூட்டாளியான மதுரையை சேர்ந்த ஆசாமி ஒருவருக்கு தெரிவித்தும், அதை வைத்து கணினி மூலம் ஆன்லைனில் பொருட்களை வாங்கி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. பின்னர் பெரியசாமியை போலீசார் சிறையில் அடைத்தனர்.