Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 402 பச்சோந்திகள்..! சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்..!!

Chameleons

Senthil Velan

, திங்கள், 8 ஜூலை 2024 (16:26 IST)
தாய்லாந்து நாட்டிலிருந்து  கடத்தி வரப்பட்ட 402 பச்சோந்திகளை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  
 
சென்னை விமானநிலையத்தின் சர்வதேச முனையத்துக்கு நேற்று அதிகாலை தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து ஒரு விமானம் வந்திறங்கியது. அதில் வந்த பயணிகளில், சந்தேக நபர்களை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி தீவிர சோதனை நடத்தினர். அந்த விமானத்தில் சுற்றுலா பயணியாக வந்த தமிழகத்தை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க ஆண் பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.  
 
இதனால் அந்த நபரை தடுத்து நிறுத்தி, அவரிடம் இருந்த 2 பெரிய அட்டை பெட்டிகளில் என்ன இருக்கிறது என கேட்டுள்ளனர். அதற்கு அவர், அதில் குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மை, சாக்லெட், பிஸ்கெட்டுகள் உள்ளன எனக் கூறியுள்ளார். எனினும், சந்தேகத்தின்பேரில் அந்த 2 அட்டை பெட்டிகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் திறந்து சோதனை செய்தனர்.
 
அதில், நிறம் மாறும் ஆப்ரிக்க நாட்டு பச்சோந்திகள் உயிருடன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த ஆண் பயணியை வெளியே விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், சென்னை பெசன்ட்நகரில் உள்ள ஒன்றிய வன உயிரின காப்பகத்தின் குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விமான நிலையத்துக்கு வந்து அட்டை பெட்டியில் இருந்த ஆப்ரிக்க பச்சோந்திகளை ஆய்வு செய்தனர். அந்த ஆண் பயணியிடமும் விசாரித்தனர். 
 
விசாரணையில், அவை முறையான ஆவணங்கள் இல்லாமல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. மேலும் இந்த ஆப்ரிக்க பச்சோந்திகளை இந்தியாவுக்குள் அனுமதித்தால், இங்கு வெளிநாட்டு நோய்க்கிருமிகள் பரவி விலங்குகள், பறவைகள் மற்றும் மனித உயிர்கள் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது என்று வன உயிரின காப்பக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, தாய்லாந்திலிருந்து சென்னைக்கு எந்த விமானத்தில் ஆப்ரிக்க பச்சோந்திகள் கடத்தி வரப்பட்டதோ, அதே விமானத்தில் அவற்றை திருப்பி அனுப்ப சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதுதொடர்பாக அவற்றை கடத்தி வந்த ஆண் பயணியை கைது செய்து சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுத்தனர். 

 
ஆண் பயணி அட்டை பெட்டிகளில் 402 பச்சோந்திகள் எடுத்து வந்ததில், அவற்றில் 67 மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்திருப்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அவற்றை அகற்றிவிட்டு, மீதமுள்ள 335 பச்சோந்திகளை மீண்டும் இன்று அதிகாலை தாய்லாந்துக்கு அதே விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று முதல் ஜூலை 12 வரை தமிழகத்தில் மழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!