திருப்பூரில் தொழில் அதிபர் ஒருவரின் மகளுக்கு அண்மையில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடந்த நிலையில் இரண்டரை மாதங்களில் அவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டி புதூரை சேர்ந்த அண்ணாதுரை அப்பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் ரிதன்யா(27). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த கவின்குமார் என்ற இளைஞருக்கும் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
தொழிலதிபரான அண்ணாதுரை தனது மகளுக்கு 300 பவுன் நகை, 70 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் என சீர்வரிசைகளுடன் 2 கோடி செலவு செய்து பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். ஆனால் திருமணமான சில நாட்களிலேயே ரிதன்யா தனது கணவருடன் மகிழ்ச்சியாக வாழவில்லை என கூறப்படுகிறது. கணவர் வீட்டாருடன் அவருக்கு ஒத்துவராத சூழல் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன் தினம் காரில் கோவிலுக்கு சென்ற ரிதன்யா, பின்னர் காருக்குள்ளேயே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
500 பவுன் நகை போடுவதாக கூறியிருந்த நிலையில் 300 பவுன் மட்டுமே போட்டதால் மணமகன் வீட்டார் ரிதன்யாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் தற்கொலை செய்து கொள்ளும் முன்பாக ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸப்பில் ஆடியோ மெஸேஜ் அனுப்பியுள்ளார்.
அதில் கணவர் தன்னை உடல்ரீதியாக துன்புறுத்துவதாகவும், அவரது வீட்டார் மனதளவில் துன்புறுத்துவதாகவும் அவர் கூறி தனது தற்கொலைக்கு அவர்கள்தான் காரணம் என்றும் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K